18வது ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்தது. ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை.
பேட்டிங்கை தொடங்கிய பெங்களூரு அணிக்கு பில் சால்ட் அதிரடி தொடக்கம் கொடுக்க முயன்றார். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரிலேயே பில் சால்ட் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரியை விளாசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டன. கைல் ஜேமிசன் வீசிய அடுத்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பில் சால்ட், 4-வது பந்தை விளாச முயன்ற போது மிட் ஆன் திசையில் நின்ற ஸ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் ஆனது. 9 பந்துகளை சந்தித்த பில் சால்ட் 16 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து களமிறங்கிய மயங்க் அகர்வால், விராட் கோலியுடன் இணைந்து சீராக ரன்கள் சேர்த்தார். பவர்பிளேவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் சேர்க்கப்பட்டன. நிதானமாக விளையாடிய மயங்க் அகர்வால் 18 பந்துகளில், 2 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் யுவேந்திர சாஹல் பந்தை டீப் பேக்வேர்டு ஸ்கொயர் லெக் திசையில் தூக்கி அடித்த போது அர்ஷ்தீப் சிங்கிடம் கேட்ச் ஆனது.



இதையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் யுவேந்திர சாஹல் வீசிய 14-வது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்ஸர் விளாசினார். இதே ஓவரில் விராட் கோலி பவுண்டரி ஒன்றை விரட்டினார். இதனால் இந்த ஓவரில் பெங்களூரு அணிக்கு 14 ரன்கள் கிடைத்தன. நிதானமாக விளையாடி வந்த விராட் கோலி 35 பந்துகளில், 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் வீசிய பந்தில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 14.5 ஓவர்களில் 131 ஆக இருந்தது.
20 ஓவர்களில் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது.
191 ரன்கள் என்ற இலக்குடன் பேட் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன், பிரியன்ஷ் ஆர்யா ஜோடி நிதானமான தொடக்கம் கொடுத்தது. பிரியன்ஷ் ஆர்யா 19 பந்துகளில், 4 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் சேர்த்த நிலையில் ஜோஷ் ஹேசில்வுட் வீசிய பந்தை சிக்ஸருக்கு விளாச முயன்ற போது எல்லைக்கோட்டில் பில் சால்ட்டின் அபாரமான கேட்ச் காரணமாக ஆட்டமிழந்தார். இதையடுத்து ஜோஷ் இங்லிஷ் களமிறங்க பவர் பிளேவில் பஞ்சாப் அணி 52 ரன்கள் சேர்த்தது.
பொறுமையாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங் 22 பந்துகளில், 2 சிக்ஸர்களுடன் 26 ரன்கள் எடுத்த நிலையில் கிருணல் பாண்டியா பந்தில் பாயின்ட் திசையில் நின்ற புவனேஷ்வர் குமாரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 2 பந்துகளில் 1 ரன் எடுத்த நிலையில் ரொமாரியோ ஷெப்பர்டு பந்தை கட் ஷாட் விளையாட முயன்றார். ஆனால் பந்து மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மாவிடம் கேட்ச் ஆனது.
ஸ்ரேயஸ் அய்யர் அவுட் ஆனநிலையிலேயே பஞ்சாபின் வெற்றி கேள்விக்குறியானது. அனாலும் மற்ற வீரர்கள் நிலைமையை புரிந்து நிதானமாக ரன்கள் சேர்த்தனர்.
கடைசி 3 ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 47 ரன்கள் தேவையாக இருந்தன. யாஷ் தயாள் வீசிய 18-வது ஓவரின் 2-வது பந்தில் அஸ்மதுல்லா ஒமர்ஸாய் (1) ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு அதிகமானது. இந்த ஓவரில் யாஷ் தயாள் 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் பஞ்சாப் அணிக்கு அழுத்தம் அதிகரித்தது. கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 41 ரன்கள் தேவையாக இருந்தன.புவனேஷ்வர் குமார் வீசிய 19-வது ஓவரில் சஷாங்க் சிங் தலா ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாச 13 ரன்கள் சேர்க்கப்பட்டன. ஜோஷ் ஹேசில்வுட் வீசிய கடைசி ஓவரில் பஞ்சாப் அணியின் வெற்றிக்கு 29 ரன்கள் தேவையாக இருந்தன. இதில் முதல் இரு பந்துகளையும் சஷாங் சிங் வீணடித்தார். இதனால் 4 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலை உருவாக பெங்களூரு அணியின் வெற்றி உறுதியானது. கடைசி 4 பந்துகளில், 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியை சஷாங் சிங் விளாசினார். எனினும் அது வெற்றிக்கு போதுமானதாக அமையவில்லை.
முடிவில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. சஷாங் சிங் 30 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் புவனேஷ்வர் குமார், கிருணல் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். யாஷ் தயாள், ஹேசில்வுட், ரொமாரியோ ஷெப்பர்டு ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.
6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கோப்பையை வென்றது. இதன் மூலம் அந்த அணியின் 18 வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது. பெங்களூரு அணிக்காக 18 வருடங்களாக விளையாடி வரும் விராட் கோலி முதன்முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை ருசித்துள்ளார்.
பெங்களூரு வெற்றி பெற்றதும் விராட் ஆனந்த கண்ணீர் விட்டார். பெங்களூரு வீரர்கள் மகிழ்ச்சியில் ஆனந்த கூத்தாடினார்கள். வெற்றி செய்தி அறிந்ததும் இரவோடு இரவாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விழாக்கோலமாக பட்டாசு வெடித்து கொண்டாடப்பட்டது.
வெற்றி பெற்ற பெங்களூரு அணிக்கு ரூ.20 கோடி பரிசு வழங்கப்பட்டது. 2ம் இடம் பிடித்த அணிக்கு
நேற்றைய போட்டியை காண இங்கிலாந்து முன்னாள் பிரதமர் ரிஷி சுனக், தனது மனைவியுடன் வந்திருந்தார். சுனக் பூர்வீகம் பஞ்சாப் மாநிலம் என்றாலும். அவர் நேற்று பெங்களூரு அணிக்கே சப்போர்ட் செய்தார். பெங்களூரு அணி சிக்சர் அடிக்கும்போது ஆரவாரம் செய்தார். பெங்களூரு வெற்றிபெற்றதும் மகிழ்ச்சியில் துள்ளினார் சுனக். தான் விராட் கோலியின் ரசிகன் என கூறிய சுனக் ஆர்சிபி வெற்றியை கொண்டாடினார். சுனக்கின் மனைவி அக்ஷதா கர்நாடகத்தை சேர்ந்தவர்.
18வது ஐபிஎல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் குஜராத் அணியில் ஆடினார். அவர் 759 ரன்கள் குவித்தார். இது தான் இந்த போட்டியின் தனி நபர் அதிகபட்ச ரன் குவிப்பாகும். இதுபோல குஜராத் வீரர் பிரசித் கிருஷ்ணா அதிகபட்சமாக 25 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
18வது ஐபிஎல் போட்டியில்9 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது. 1294 சிக்சர்கள், 2245 பவுண்டரிகள் அடிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஐதராபாத் அணி 286 ரன்கள் சேர்த்தது. குறைந்தபட்சமாக கொல்கத்தா அணி 95 ரன்களில் சுருண்டது.