Skip to content

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு புதிய உச்சம்- அமைச்சர் சிவசங்கர்

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தியூர், கோட்டைக்காடு, கச்சிராயன்பேட்டை, புதுக்குளம், ஆதனங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ரூபாய் 4 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட பணிகளைபோக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சர்  சிவசங்கர்   தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அமைச்சர் சிவசங்கர் அளித்த பேட்டி : அரசுப் போக்குவரத்து கழக பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 7 லட்சத்து 74 ஆயிரம் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டுகளை விட அதிகமாக உச்சம் தொட்ட ஒரு பதிவாக உள்ளது. கடந்த ஓராண்டில் ஆறு லட்சத்து 64 ஆயிரம் என்றிருந்த முன் பதிவு செய்து பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை இப்போது ஒரு லட்சம் பேர் கூடுதலாகியிருப்பது மகிழ்ச்சிக்குரியது. கடந்த தீபாவளி, பொங்கலின்போது அந்த டிரெண்டை நாம் கவனித்தோம். மக்கள் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்க தொடங்கி இருக்கின்றனர். இதுவரை, தனியார் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்தவர்கள், தற்போது அரசு பேருந்து நோக்கி பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பதவியேற்ற பின் புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கியதின் விளைவாக இப்போது பயணிகளுக்கு நிறைவான சேவையை வழங்க முடிகிறது. அதேபோல பயண கட்டணமும் விலை உயர்வின்றி, அரசு மக்களுக்கு சேவை தருகிறது. அரசு பேருந்தின் மீது நம்பிக்கை கொண்டதாலயே மக்கள் அதிக அளவு முன்பதிவு செய்து பயணித்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஓடிய பேருந்துகளின் புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து மீண்டும் செய்தியாக்குவதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து செய்து வருகின்றனர். அதை தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு ஃபேக்ட் செக்கிங் செய்து பழைய வீடியோக்கள் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபித்து வருகிறது. இப்போது பெரும்பான்மையான இடங்களில் புறநகர் பேருந்துகள் மஞ்சள் நிறத்திலும், நகர பேருந்துகள் நீல நிறத்தில் ஓடும் அத்தனையும் புதிய பேருந்துகளை என்பது மக்கள் உணர்ந்துள்ளனர். எனவே அரசுப்பேருந்துகளில் குறைபாடு ஏதும் இல்லாத காரணத்தினால் தான், முன்பதிவு செய்து பயணம் செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்கள் விரும்பி அரசு பேருந்துகளில்  பயணிக்கின்றனர் என்பதை இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். அமைச்சரின் நிகழ்ச்சிகளில் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட திட்ட அலுவலர் சிவராமன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள்  பங்கேற்றனர்.
error: Content is protected !!