Skip to content

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

கிரிக்கெட் போதைக்கு முற்றுபுள்ளி வைக்குமா பெங்களூரு சம்பவம்?

 

 

பெங்களூரு…….. இது கர்நாடக மாநிலத்தின் தலைநகர் மட்டுமல்ல,  இந்தியாவின்  ஐ.டி. தலைநகர் என்ற பெருமையும் பெற்றது.    ஆனால் கடந்த  சில  தினங்களாக  பெங்களூரு நகரம் பரபரப்பு நகரமாகி விட்டது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில்  பெங்களூரு அணி வெற்றி பெற்றதால்   வெற்றி கொண்டாட்டங்கள்  கர்நாடக மாநிலத்தில் களை கட்டியது.  ஆட்டம் பாட்டம், பட்டாசு வெடிப்பு, ஊர்வலம் என   ரசிகர்கள் கொண்டாடினர்……..காரணம் ஐபிஎல் போட்டியில்  18 வருட ஏக்கம், எதிர்பார்ப்பு அன்றைய தினம்  கைகூடியது.

மறுநாள் பெங்களூரு திரும்பிய   வீரர்களுக்கு  கர்நாடக அரசின் சார்பிலும், கிரிக்கெட் சங்கம் சார்பிலும் வரவேற்பு, பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.   குஜராத்தில் இருந்து  பெங்களூரு வந்திறங்கிய வீரர்களுக்கு அரசின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு,   வீரர்கள்  நேராக  கர்நாடக மாநில சட்டமன்ற வளாகமான  விதான சவுதாவுக்கு அழைத்து செல்லப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.அங்கு திறந்த வெளியில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதுவரை எல்லாம் சரியாகத்தான் நடந்து கொண்டிருந்தது.

அடுத்ததாக கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சின்னசாமி  ஸ்டேடியத்தில்  பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த விழாவை காண  மாநிலம் முழுவதும் இருந்து கிரிக்கெட் ரசிகர்கள் பெங்களூருவில் குவிந்தனர்.   மைதானத்திற்குள்  செல்ல  ரசிகர்களுக்கு  பாஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதாவது பாஸ் பெற்றவர்கள்  மட்டுமே உள்ளே செல்ல அனுமதி  என அறிவிக்கப்பட்டிருந்தாலும்,  ஸ்டேடியத்தின் அனைத்து வாயில்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள்   பல்லாயிரகணக்கில் குவிந்து உள்ளே செல்ல முயன்றனர்.     பெண்கள், இளைஞர்கள் கூட்டம்  மிகவும் அதிகம்.

சின்னசாமி ஸ்டேடியத்தில் அதிகபட்சமாக 30 ஆயிரம் பேர் அமரலாம். ஆனால்   விழாவை காண  5லட்சம் பேர் திரண்டிருப்பார்கள் என  ஒரு தரப்பினா் கூறும் நிலையில், 8 லட்சம்பேர் திரண்டதாக கர்நாடக உள்துறை அமைச்சர் கூறுகிறார்.

இவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்று   விழா ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கவில்லை. போலீசும்  கணிக்கத் தவறிவிட்டது.   சிலமணி நேரத்தில் கூட்டம் போலீசாரின் கட்டுக்காவலை மீறிபோய்விட்டது.  போலீசாரால் எதுவும் செய்யமுடியவில்லை.

கூட்டத்தை கட்டுப்படுத்த தடியடி பிரயோகம்  செய்து பார்த்தனர்.   ஆனால் அது  பலனிக்கவில்லை.

இதற்கிடையே வீரர்கள்  பாதுகாப்புடன் ஸ்டேடியத்திற்குள் அழைத்து வரப்பட்டனர்.  பாராட்டு விழாவும் தொடங்கியது.

இதை அறிந்த ரசிகர்கள்  ஸ்டேடியத்திற்குள் எப்படியாவது சென்றுவிடவேண்டும் என  முண்டியடித்தனர்.  நிலைமையை சமாளிக்க   12   மற்றும் 13வது கேட்  வழியாக  அனைவரையும் உள்ளே அனுமதித்தனர்.  அதாவது  பாஸ் இல்லாதவர்களும்  உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

மைதானத்திற்குள் இடம் பிடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்  ஒருவர் மீது ஒருவர் ஏறி விழுந்து உள்ளே சென்றனர்.  இதில் நுழைவு வாயில் கேட்டும் உடைந்து விழுந்தது. அதையும் கண்டுகொள்ளாமல் ரசிகர்கள் மைதானத்திற்குள் பாய்ந்தனர்.

இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தில் பலர்  கீழே விழுந்தனர். அவர்கள் மீதும் ஏறி ஓடினார்கள். இதில் 40க்கும் மேற்பட்டவர்கள் மயங்கி விழுந்தனர்.  அவர்களுக்கு முதலுதவி அளிக்க  மைதானத்தில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. குறைந்தபட்சம் ஆம்புலன்ஸ் கூட இல்லை.

இவ்வளவு பெரிய விழா ஏற்பாட்டாளர்கள் குறைந்த பட்சம் மருத்துவ வசதி செய்திருக்க வேண்டும்.

அந்த வசதி செய்யப்படாததால்,  மயங்கி விழுந்தவர்களை   போலீசார்   மீட்டு  இரண்டு தனியார் மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றனர்.    அவர்களில் 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.  இந்த கால தாமதமும்  மரணத்திற்கு காரணம். இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.  ஒரு குழந்தையும் பலியானது சோகத்திலும் சோகம்.

9ம் வகுப்பு மாணவி திவ்யா வம்சி , திருப்பூரை சேர்ந்த  பெண் அதிகாரி காமாட்சி உள்பட 6  பெண்களும் இதில் பலியானார்கள்.

தகவல் அறிந்ததும் முதல்வர் சித்தராமையா,  மருத்துவமனைகளுக்கு சென்று  பார்வையிட்டார். துணை முதல்வர் சிவக்குமார்,   நடந்த  துயர  சம்பவத்திற்கு மன்னிப்பு கோரினார். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டதாக கூறினாா்.

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு  அரசு சார்பில் தலா   10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். ….. கிரிக்கெட் சங்கம்,  ஆர்சிபி அணி நிர்வாகம்  ஆகியவையும் நிவாரணம் அறிவித்துள்ளது.

எத்தனை கோடிகள் கொடுத்தாலும்  போன உயிர் திரும்பாது.  பெற்றோருக்கு குழந்தை கிடைக்காது.   எனவே இது ஈடு செய்ய முடியாத  பேரிழப்பு தான்,

பிரதமர் மோடி அவர்களும், எதிர்க்கட்சித்தலைவர் ராகுல் அவர்களும்  இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

கூட்டங்களிலும், நெரிசல்களிலும் சிக்கி  உயிர்பலியாகும் சம்பவங்கள் தொடர்கதையாக நடந்து  கொண்டு  தான் இருக்கிறது.

திரை நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் மீது  இந்திய  மக்கள்  வைத்திருப்பது  அன்பா, போதையா என தெரியவில்லை.    திரை நட்சத்திரங்களையும்,  கிரிக்கெட் வீரர்களையும்  இந்த காலத்திலும் ….. தங்கள் ரோல் மாடலாக கருதுவது தான் வேடிக்கை.  இந்த கிரிக்கெட் போதை தான்  நடந்த துயர சம்பவத்திற்கு அடிப்படை காரணம் என்றாலும்,

இப்படிப்பட்ட விழா  ஏற்பாடு செய்கிறவர்கள் உரிய  பாதுகாப்பு நடவடிக்கையில் கவனம் செலுத்தி இருக்க வேண்டும்.   உடனடியாக இந்த பாராட்டு விழா நடத்தியதை தவிர்த்து இருக்கலாம்.   விழா ஏற்பாடுகள் குறித்து   தீவிரமாக  ஆலோசித்து,  பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை  நன்றாக திட்டமிட்டு  உத்தரவாதப்படுத்திய  பிறகு விழா நடத்தி இருக்க வேண்டும்.

அவசர கோலத்தில் அள்ளித்தெளித்தது போல  விழா ஏற்பாடுகளை செய்து 11 உயிர் பலியாவதற்கு  காரணமாகி விட்டார்கள் விழா ஏற்பாட்டாளாகள்.

இந்த சோக  நிகழ்வு குறித்து நீதி விசாரணை நடத்தப்படும். தவறு எங்கே நடந்தது என கண்டுபிடிக்கப்படும் . 15 நாட்களுக்குள் அறிக்கை அளிக்க  உத்தரவிட்டுள்ளேன் என  முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.  இதற்காக நீதிபதி மைக்கேல்  குன்ஹா தலைமையிலான ஒரு நபர் கமிஷனை அரசு அமைத்து உள்ளது.

இந்த சம்பத்தை தொடர்ந்து  பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர்  தயானந்த்,  மத்திய மண்டல துணை கமிஷனர்  சேகர்,  உள்பட 5 போலீஸ்  அதிகாரிகள்  பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே  பெங்களூரு ஐகோர்ட்  தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது-    சமூகநல ஆர்வலர்களும் வழக்கு தொடர்ந்தனர். அதில்  இந்த சம்பவத்துக்கு  கர்நாடக முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் மீதும் வழக்கு தொடர வேண்டும் என  பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  கர்நாடக அரசு மீது சரமாரியான கேள்விகள் எழுப்பினர்.  கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 21  வாயில்கள் இருந்தபோதும், 3 வாயில்களை மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.  அத்தனை வாயில்களும் திறக்கப்பட்டிருந்தால்,  விபத்து ஏற்பட்டிருக்காது என்று அட்வகேட் ஜெனரல் குற்றம் சாட்டினார்.

ஆர்சிபி  வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த  முடிவு செய்தது யார், அவர்கள் என்ன இந்திய நாட்டுக்காக விளையாடினார்களா?  என்றும் வக்கீல்கள் சரமாரி கேள்வி எழுப்பினர்.

இனி இதுபோன்ற  துயர சம்பவங்கள் நடக்காதிருக்க , இது ஒரு பாடமாக இருக்க வேண்டும். அதற்கான  ஏற்பாடுகளை அரசும், விழா ஏற்பாட்டாளர்களும் செய்ய வேண்டும் . வழக்கம் போல எதிர்க்கட்சிகள், இந்த   சம்பவத்தையும் அரசியலாக்க முனைவது தான்  சோகத்திலும் பெரிய சோகம்.

காவல்துறையும் , உளவுத்துறையும் இதில் கூடுதல்  கவனம் செலுத்தி இருக்க வேண்டும். ரசிகர்களுக்கும் சுய கட்டுப்பாடுகள் இருக்க  வேண்டும். ஐபிஎல் என்பது 10  முதலாளிகளின்  லாபத்திற்காக  நடத்தப்படும் போட்டி  என்பதை  ஒவ்வொருவரும் உணர்ந்து  கிரிக்கெட் என்னும் போதையில் இருந்து விடுபட்டால் இதுபோன்ற துயரங்கள் நடந்திருக்காது என்பது தான்  பெரும்பாலான மக்களின் கருத்து.

இதற்காக  அமைக்கப்பட்ட நீதிபதி  மைக்கேல் குன்ஹா ஆணையம் இதற்கு ஒரு நல்ல தீர்வு தரும்  என்று நம்புவோம்.  இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்.

error: Content is protected !!