தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு 6 எம்.பிக்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் 2ம் தேதி தொடங்கி இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. திமுக கூட்டணி சார்பில் கமல்ஹாசன், வக்கீல் வில்சன், கவிஞர் சல்மா, சேலம் மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும், அதிமுக சார்பில் வக்கீல் இன்பதுரை, தனபால் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
இது தவிர 3 சுயேச்சைகளும் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒரு வேட்புமனுவை 10 எம்.எல்.ஏக்கள் பரிந்துரைக்க வேண்டும். அதன்படி சுயேச்சைகளுக்கு யாரும் பரிந்துரைக்காததால் நாளை வேட்புமனுக்கள் பரிசீலனையின் போது சுயேச்சைகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.12ம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசிநாள். இன்று மாலை 3 மணி வரை யாரும் வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் 3 மணிக்கு பிறகு திமுக கூட்டணி மற்றும் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரும் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். தேர்தல் நடத்தப்படாது.