புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “உலகம் முழுவதும் கொரோனா இருக்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் பெரிய பதட்டத்தை உருவாக்க கூடாது. கொரோனாவை பொருத்தவரை 2019 இறுதியில் இருந்து ஆல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், காமா, காமா பிளஸ், ஒமேக்ரான் போன்ற தொடர் உருமாற்றங்களை பெற்று வந்தது. தற்போது வந்துள்ள கொரோனா பாதிப்பை பொறுத்தவரை 19 மாதிரிகள் மும்பையில் இருக்கக்கூடிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் தற்போது பரவும் கொரோனா ஒமேக்ரானில் ஒரு வகை. இந்த வைரஸ் வீரியமற்ற வைரஸ். இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு மூன்று நாட்களில் இருந்து தொண்டை வலி, சளி காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருக்கும். பொதுமக்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒன்றிய அரசின் சுகாதார துறை அறிவுறுத்தலின்படி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற தீராத காய்ச்சல் நீண்ட நாள் தொண்டை வலி, சளி சரியாகாமல் இருந்தால் அரசு மருத்துவமனைக்கு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பொதுமக்களுக்கு பொதுவான அறிவுறுத்தலோ விதியோ சட்டமோ, கட்டாயமா எதுவும் இல்லை. அதே நேரத்தில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இணை நோய் பாதிப்பு இருப்பவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள் வயது முதிர்ந்தவர்கள் பொது இடத்திற்கு செல்லும் பொழுது முக கவசம் அணிந்து கொள்வது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை ஆனால் அது நல்லது. இந்திய அளவில் கொரோனாவால் தற்பொழுது எந்த உயிரிழப்பும் இல்லை. இந்திய அளவிலும், தமிழகத்திலும் தற்போது வரை கொரோனாவால் எந்த உயிரிழப்பும் இல்லை கேரளாவில் நம்மை விட நாள் ஒன்றுக்கு பத்து மடங்கு அதிகமாக கொரோனா பரவி வருகிறது. அங்கும் கொரோனா உயிரிழப்பு இல்லை. ஏற்கனவே ஏற்பட்ட ஒரு இரண்டு உயிரிழப்புகளை பொறுத்தவரை ஏற்கனவே இதயம், சிறுநீரகம் பாதிப்பு போன்ற இணை நோய்களோடு எந்த மருத்துவமனை தனியார் மருத்துவமனை உட்பட எங்கு அனுமதித்தாலும் வாழ்வின் இறுதி கட்டம் என்று சொல்லும் அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கும் பொழுது கொரோனா உள்ளிட்ட 12, 13 வகையான பரிசோதனைகளை மேற்கொள்கிறார்கள். அதில் ஒன்று இரண்டு நபர்களுக்கு கொரோனா பாதிப்பும் இருக்கிறது. அவர்கள் உயிரிழப்பதை கொரோனா உயிரிழப்பாக கருத முடியாது. அண்டை மாநிலங்களில் இருந்து வருபவர்களை கண்காணித்து பரிசோதனை செய்ய எந்த அவசியமும் இல்லை,கண்காணித்து பரிசோதனை செய்ய வேண்டும் என்ற விதிமுறைகளையும் ஒன்றிய சுகாதாரத் துறை விதிக்கவில்லை” என்றார்.