கோவை, சின்னியம்பாளையம் பகுதியில் அவினாசி சாலையை ஒட்டிய இடத்தில் ஸ்ரீ பிளாக் மாரியம்மன் என்ற திருக்கோவில் அமைந்து உள்ளது. இன்று காலை கோவில் பூசாரி கோவிலை திறக்க வந்த போது கோவிலில் உள்ள விநாயகர், இராகு, கேது, எலி வாகனம் உள்ளிட்ட சிலைகள் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, இது குறித்தான தகவல் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு பரவியது. இதனை அடுத்து
ஏராளமான பொதுமக்கள் கோவிலில் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன், சூலூர் காவல் ஆய்வாளர் லெனின் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்கள். கோவிலை சுற்றி உள்ள சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கோவிலில் பாதுகாப்பிற்காக ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
