தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் தொழில் நகரமான கோவையில், பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது. இங்கு தமிழக மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட வட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் மத்திய அமைந்து உள்ள காந்திபுரம் பகுதியில் உள்ள நகரப் பேருந்து நிலையம், திருவள்ளுவர் பேருந்து நிலையம், வெளியூர் பேருந்து நிலையம் மற்றும் ஆம்னி பேருந்து நிலையம் என நான்கு பேருந்து நிலையங்கள் உள்ளது.
இந்நிலையில், காந்திபுரத்தில் உள்ள இந்த நான்கு பேருந்து நிலையத்தில் காட்டூர் காவல் நிலைய காவல் துறையினர் 20 க்கும் மேற்பட்ட காவலர்கள் மோப்பநாய் உதவியுடன் போதை பொருள் குறித்து சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் காந்திபுரம் பேருந்து நிலையத்திற்கு அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்வதாலும், கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் காந்திபுரம் பகுதிக்கு வருவதனால் இந்த திடீர் சோதனையானது நடத்தினர். நாள்தோறும் அதிகரித்து வரும் போதைப் பொருள்களின் புழக்கத்தை தடுக்கும் விதமாக இந்த சோதனை தற்போது நடைபெற்று வருகிறது.
அதேபோல வெளிமாநிலங்கள் செல்லக் கூடிய கேரளா மற்றும் கர்நாடகா பேருந்துகளிலும் போலீசார் தீவர சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் சோதனையால் காந்திபுரம் பேருந்து நிலையங்களில் பரபரப்பு ஏற்பட்டது.