இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்று உள்ளது. அங்கு 5 டெஸ்ட் போட்டிகளில் ஆடுகிறது. முதல் டெஸ்ட் லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் குவித்தன. 6 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 4-வது நாள் ஆட்டத்தில் 96 ஓவர்களில் 364 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 137, ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்தனர்.
22 நிமிடங்களுக்கு பிறகு மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்ட நிலையில் ஸாக் கிராவ்லி 126 பந்துகளில், 7 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் முதல் சிலிப் திசையில் நின்ற கே.எல்.ராகுலிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு ஸாக் கிராவ்லி, பென் டக்கெட் ஜோடி 42.2 ஓவர்களில் 188 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆலி போப் 8 பந்துகளில், 2 பவுண்டரிகளுடன் 8 ரன்கள் சேர்த்த நிலையில் பிரசித் கிருஷ்ணா பந்தில் போல்டானார்.
இதைத் தொடர்ந்து ஜோ ரூட் களமிறங்கினார். 54 ஓவர்களில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 253 ரன்கள் சேர்த்து வெற்றியை நோக்கி பயணிக்க தொடங்கியது. அந்த சூழ்நிலையில் குறைந்தது 42 ஓவர்கள் மீதம் இருந்தது. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு மேற்கொண்டு 118 ரன்கள் தேவையாக இருந்தது.
ஷர்துல் தாக்குர் வீசிய அடுத்த ஓவரில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு அழுத்தம் கொடுத்தார்.
அபாரமாக விளையாடி வந்த பென் டக்கெட் 170 பந்துகளில், 21 பவுண்டரிகள், ஒரு சிக்ஸருடன் 149 ரன்கள் எடுத்த நிலையில் ஷர்துல் தாக்குர் வீசிய பந்தை கவர் திசையில் அடித்த போது நித்திஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் ஆனது. இதையடுத்து களமிறங்கிய ஹாரி புரூக் லெக் திசையில் வீசிய பந்தை ஸ்டெம்புக்கு பின்புறம் தட்டிவிட முயன்றார். ஆனால் ரிஷப் பந்த் அற்புதமாக கேட்ச் செய்தார்.
இதன் பின்னர் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினார். இங்கிலாந்து அணி 58.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. அப்போது இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 102 ரன்கள் தேவையாக இருந்தது. குறைந்தது 37.3 ஓவர்கள் மீதம் இருந்தன. 30 நிமிடங்களுக்கு பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. பிறகு 51 பந்துகளில் 33 ரன்கள் எடுத்த நிலையில், ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து பென் ஸ்டோக்ஸ் வெளியேறினார். அடுத்து இறங்கிய ஜேமி ஸ்மித் 44 ரன்கள் எடுத்தார். இப்படியாக 82 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
டெஸ்ட் அணி கேப்டன கில் பதவியேற்றதும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது. இந்த தோல்வி குறித்து கில் கூறும்போது, 2வது இன்னிங்சில் இன்னும் கூடுதலாக ரன் சேர்த்து இருக்க வேண்டும். கடைசி 6 விக்கெட்டுகளும் மளமளவென சரிந்து விட்டது எதிர்பார்க்காத ஒன்று என கூறி உள்ளார்.
பொதுவாக இந்த அணி பல புதுமுகங்களை உள்ளடக்கியது. தோல்வி மூலம் பாடம் கற்றுக்கொள்வார்கள் என்றாலும், முழுக்க முழுக்க மோசமான ஆட்டத்தால் இந்தியா தோல்வி அடைந்து உள்ளது.
ஜெய்ஸ்வால், இந்த வயதிலேயே கவனக்குறைவாக மைதானத்தில் நிற்கிறார். பீல்டிங்கில் இருப்பவர் ஒவ்வொரு வினாடியும் உஷாராக இருக்க வேண்டும். ஆனால் அவர் கையில் கிடைத்த 3 கேட்ச்களை கோட்டை விட்டார்.
இரண்டாவது இன்னிங்சில், கருண் நாயர் பந்தை பிடிக்க முயன்றபோது கீழே விழுந்தார். சின்னகுழந்தை விழுந்து விட்டால், யாராவது தூக்கி விட வருவார்கள் என எதிர்பார்ப்பது போல கீழே கிடந்தார். எழுந்து ஓடி பந்தை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் கூட அவருக்கு வரவில்லை.
இதை சரியான நேரத்தில் ஜடேஜா மைதானத்திலேயே கண்டித்ததை காணமுடிந்தது. கீழே விழுந்து விட்டால் அப்படியே கிடப்பியா, எழுந்து போய் பந்தை பிடி என்றார்.
விக்கெட் கீப்பர் பண்ட்டும் தன் பங்குக்கு சொதப்பிக்கொண்டிருந்தார். இப்படியாக ஒட்டுமொத்த அணியும் மோசமாகத்தான் ஆடியது.
அடுத்த டெஸ்ட் போட்டி ஜூலை 2ம் தேதி பர்மிங்ஹாமில் நடக்கிறது. தவறுகளை திருத்திக்கொண்டு இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்ப்போம்.