ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. இவ்வருடம் ஆடிமாத ஒவ்வொரு வெள்ளிக் கிழமைகளிலும் அரியலூர் மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் காலை முதல் சிறப்பு பூஜைகள் நடைபெற்று
வருகிறது. கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. அரியலூர் நகரில் மேல தெருவில் உள்ள அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு ஒரு லட்சத்து எட்டாயிரம் வளையல்களால் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மனுக்கும் அம்மன் வீற்றிருக்கும் பீடம் ஆகியவற்றிற்கு வண்ண வண்ண வளையல்களை மாலைகளாக கோர்த்து சுவர்களை மறைத்தும் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை மிகவும் கவர்ந்தது. திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.