தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம், 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித்தருவது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கடந்த 13 நாட்களாக போரட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல சிறப்பு திட்டங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளன. அமைச்சர்வைக் கூட்டத்திற்குப்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “ தூய்மை பணியாளர்கள் மீது முதலமைச்சர் தனி கரிசனத்துடன் இருக்கிறார். பணியாளர்கள் நலனை காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. தூய்மை பணியாளர்களின் நல வாரியம் சிறப்பாக செயல்படுவதை அரசு உறுதி செய்துள்ளது.
* தூய்மை பணியாளர்கள் குப்பைகளை கையாளும்போது தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்க தனி திட்டம் செயல்படுத்தப்படும்.
* பணியின் போது மரணமடையும் தூய்மை பணியாளர்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
* தூய்மை பணியாளர்கள் சுய தொழில் தொடங்கும் போது அவர்களுக்கு ரூ.3.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்; இதற்கான 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*தூய்மை பணியாளர்களின் குழந்தைகளுக்கான புதிய உயர் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
* நகர்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மை பணியாளர்களுக்கு 30,000 புதிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும்.
*கிராமப்புறங்களில் கலைஞர்கள் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக ரூபாய் 5 லட்சம் இலவச காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும்.
* தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளால் கட்டணம் இன்றி வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை மாநகராட்சிகள் செயல்படுத்தப்படும், அதன் பின் படிப்படியாக மற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரிவு படுத்தப்படும்.
மேலும் , நீதிமன்ற உத்தரவால் தான் தூய்மை பணியாளர்கள் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பலவந்தமாக வெளியேற்ற வேண்டும் என்கிற எண்ணம் அரசுக்கு இல்லை. பணி நிரந்தரம் குறித்த வழக்குகளில் முடிவுகளை பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். மற்ற கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம், தொழிலாளர் தீர்ப்பாயம் வழக்கு முடிவுகளை பொறுத்து தீர்மானிக்கப்படும். தனியார் மையம் என்பது ஏற்கனவே மற்ற மண்டலங்களில் உள்ள நடைமுறைதான். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களுடன் 12 கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அனைவரும் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. அரசின் கதவுகள் பேச்சு வார்த்தைக்கு எப்போதும் திறந்திருக்கும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.