பிசிசிஐ தலைவராக பதவி வகித்த ரோஜர் பின்னி, 70 வயதான நிலையில் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து, தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிசிசிஐயின் தற்காலிக தலைவராக பொறுப்பேற்றார். பிசிசிஐக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், பிசிசிஐ புதிய தலைவராக இந்திய ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் 94-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் வருகிற 28-ந் தேதி நடைபெற உள்ளது. அதில் சச்சின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன.
இந்நிலையில் 52 வயதான சச்சின் டெண்டுல்கரை நிர்வகிக்கும் அவருடைய எஸ்ஆர்டி ஸ்போர்ட்ஸ் மேலாண்மை நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவிக்கு சச்சின் டெண்டுல்கரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக செய்திகளும், வதந்திகளும் பரவி வருவதாக எங்கள் கவனத்துக்கு வந்துள்ளது. அத்தகைய முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை என்பதை நாங்கள் திட்டவட்டமாகக் கூற விரும்புகிறோம். ஆதாரமற்ற ஊகங்களுக்கு நம்பகத்தன்மை அளிப்பதை தவிர்க்குமாறு சம்பந்தப்பட்ட அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.