ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேருந்தில் நேற்று (அக்., 14) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். செட்ராவாவில் உள்ள லாவரன் கிராமத்தைச் சேர்ந்த மகேந்திர மேக்வால் மற்றும் அவரது மனைவி, மூன்று குழந்தைகள் என குடும்பமே தீயில் கருகி உயிரிழந்தனர். மகேந்திரா ஜெய்சால்மரில் உள்ள ஒரு ராணுவ வெடிமருந்து கிடங்கில் பணிபுரிந்து வந்த நிலையில், தீபாவளியைக் கொண்டாட நகரில் இருந்து சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த துயரம் நடந்தது.
ஜோத்பூர் – ஜெய் சால்மர் தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சொகுசு பஸ் திடீரென தீப்பற்றி எரிந்தது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணித்த பயணிகளில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 16 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ஜோத்பூரில் நடைபெற்ற பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், பஸ் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் காயமடைந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்தார்.