Skip to content

டியூட்’ படத்தில் இளையராஜா பாடலை நீக்க கோர்ட் உத்தரவு

  • by Authour

தீபாவளிக்கு வெளியான டியூட் (Dude) திரைப்படத்தில் தன்னுடைய இசையமைப்பில் வெளியான ‘புது நெல்லு புது நாத்து’ திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த ‘கருத்த மச்சான்’ மற்றும் பணக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ‘100 வருஷம் இந்த மாப்பிள்ளைக்கு’ பாடல்கள் தனது அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறி இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், படத்தில் இடம்பெற்றுள்ள இந்த இரண்டு பாடல்களையும் நீக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கானது நீதிபதி என்.செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போதும் கூட கேட்டு ரசிக்கின்றனர். இதனால் இளையராஜா எவ்வாறு பாதிக்கப்படுகிறார்?” என்றும், பழைய பாடல்களை பயன்படுத்துவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

இதற்கு பதில் அளித்து வாதிட்ட இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர், ”இளையராஜாவின் அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறும் வகையில் இந்த பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பாடலை உருமாற்றி உள்ளனர். பாடலுக்கான உரிமை எங்களிடம் உள்ளது. அதனால் படத்திலிருந்து பாடலை நீக்கியும், பாடலுக்கு தடை விதித்தும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.

அப்போது டியூட் (Dude) பட தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், ”தொடர்ச்சியாக இளையராஜாவின் பாடல்களை பதிப்புரிமையை மீறி மற்ற படங்களில் பயன்படுத்துவது ஏன்?” என நீதிபதி செந்தில்குமார் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த டியூட் (Dude) திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ”பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்தது. சோனி நிறுவனத்திடம் இருந்து இந்த பாடல்களை படத்தில் பயன்படுத்துவதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, ”படம் திரையரங்குகள், ஓடிடி தளங்களிலும் வெளியாகும் வரை அமைதியாக இருந்துவிட்டு தற்போது இந்த வழக்கை தாக்கல் செய்தது ஏன்?” என இளையராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த இளையராஜா தரப்பு வழக்கறிஞர், ”ஏற்கெனவே இது சம்பந்தமாக தயாரிப்பாளர் தரப்பிற்கு நோட்டீஸ் அனுப்பியபோது, அதுபோல எந்த நபரும் இல்லை என நோட்டீஸ் திருப்பி அனுப்பப்பட்டது” என்று தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.

இந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று (நவ.28) உத்தரவு பிறப்பித்துள்ளது. “இளையராஜாவின் பாடலின் புனிதத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது” என கூறிய நீதிபதி என். செந்தில்குமார், இது குறித்த வழக்கு விசாரணையை ஜன.7-ம் தேதிக்கு தள்ளிவைத்து, தயாரிப்பு நிறுவனத்திடம் பதிலளிக்கவும் ஆணை பிறப்பித்தார்.

error: Content is protected !!