தஞ்சாவூர் அருகே ரெட்டிபாளையம் மேட்டுத்தெருவை சேர்ந்த சாமுவேல் என்பவரின் மகன் வின்சென்ட்குமார் (38). ஜேசிபி மெக்கானிக். இவர் தஞ்சாவூர் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சோழா சிட்டியில் வீடு எடுத்து ஜேசிபி சர்வீஸ் செய்து வந்தார். இங்கு சர்வீஸ் செய்வதற்கு தேவையான உபரகணங்கள் மற்றும் லேப்டாப் உட்பட பொருட்களை வைத்திருந்தார். சர்வீஸ் பணிகளுக்காக அழைத்தால் இங்கிருந்து உபகரணங்களை எடுத்து செல்வது வழக்கம்.
அந்த வகையில் கடந்த 4ம் தேதி இரவு வழக்கம் போல் சர்வீஸ் பணிகளை முடித்துவிட்டு சோழாசிட்டியில் உள்ள வீட்டில் உபகரணங்களை வைத்து பூட்டினார். பின்னர் ரெட்டிப்பாளையத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ஜேசிபி மதர்போர்டு 7, ஜேசிபி வாகன உபகரணங்கள்-6, ஆப்பிள் டேப்-1 லேப்டாப் ஒன்று, மெக்கானிக்கல் டூல்ஸ் கிட் போன்றவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வல்லம் போலீசில் வின்சென்ட் குமார் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ரேகைகளை பதிவு செய்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் சப்-,இன்ஸ்பெக்டர் (பொ) சபிதாதமிழ் அஞ்சனி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

