மகாராஷ்டிர மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் கணவனுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், ஒரு வயது குழந்தையைத் தாயே கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லத்தூர், ஷியாம் நகர் பகுதியைச் சேர்ந்த தினக்கூலி தொழிலாளி ஒருவர், கடந்த திங்கட்கிழமை வேலை முடிந்து வீட்டிற்குத் தாமதமாக வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது 30 வயது மனைவிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அந்தப் பெண், வீட்டில் இருந்த கத்தியை எடுத்துத் தனது ஒரு வயது பெண் குழந்தையை முகம், வயிறு, தலை எனப் பல இடங்களில் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அந்தப் பிஞ்சு குழந்தை, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்துக் கணவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அந்தப் பெண்ணைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

