Skip to content

கட்சி தேர்தல் பொறுப்பில் இருந்து அண்ணாமலை திடீர் விலகல்!

தமிழ்நாட்டில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்காக அதிமுக – பாஜக கூட்டணி மல்லு கட்டுகிறார்கள். நாம் தமிழர் மற்றும் தவெக வும் களத்தில் வேகம் காட்டி வருகிறார்கள். தவெக தலைவர் விஜய் நேற்று பாஜக மற்றும் திமுகவை ஓட்டை என்ஜின் டப்பா என்ஜின் என்று விமர்சித்தார். இதற்கு பதிலளித்துள்ள அண்ணாமலை, விஜய்யிடம் என்ஜினே இல்லை என்றவர், திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி என்றும் கூறியுள்ளார். மேலும், தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன் என்று கூறியுள்ளார்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம், “யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு மத்திய பட்ஜெட் உள்ளது. ஒவ்வொரு வருடமும் மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. குறு சிறு நடுத்தர நிறுவனங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வகையில் இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. உட்கட்ட்டைப்பு,பெண்கள் விடுதி, விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அண்ணாவை பற்றி அமைச்சர்களுக்கு தெரியுமா
அமெரிக்காவுடன் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் 18 சதவீதம் என முடிவுக்கு வந்துள்ளது. எல்லா மாநிலத்திற்கும் பயனளிக்கும் வகையில் நல்ல பட்ஜெட் கொடுத்துள்ளோம். தமிழ்நாடு அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அண்ணாவின் ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறதா. அண்ணாவின் குடும்பத்தினர் இன்றைக்கு எப்படி இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா. அண்ணாவின் குடும்பம் அரசியல் பக்கமே வருவதே இல்லை.

அண்ணா என்கிற பசு மாட்டின் மீது நிற்கும் காக்கா தான் இப்போதைய திமுக ஆட்சி. திமுக மீதான வெறுப்பு திராவிட சித்தாந்தத்திற்கு எதிராக மாறி வருகிறது. ஒவ்வொரு திமுக அமைச்சரையும் ஒரு அறையில் சாத்திவிட்டு அண்ணாவை பற்றி 10 கருத்துகள் எழுத சொன்னால் யாருக்கும் எழுதத் தெரியாது. என் தந்தையின் உடல்நலம் காரணமாக நான் கோவையில் இருக்கிறேன். அவரை கவனித்துக் கொள்ள வேண்டிய கடமை உள்ளது.

விஜய்யிடம் என்ஜினே இல்லை
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேனா என தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். இதன் காரணமாக, தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பணியில் இருந்து விலகுகிறேன். இதைப்பற்றி எங்கள் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் சொல்லியுள்ளேன். கட்சியில் இருந்து ஒருவரை சஸ்பெண்ட் செய்ய முடியாமல் காங்கிரஸ் கமிட்டி தலைவர் இருக்கிறார். காங்கிரஸ் அடிமைக் கட்சியாக உள்ளது. திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி ஸ்டாலின் என்ன சொன்னாலும் தேசிய ஜனநாயக கூட்டணி கெட் இன் தான்.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. விரைவில் இந்த சூழ்நிலை விரைவில் மாறும். தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் முதலமைச்சர் வேட்பாளர். விஜய்யை நான் தேவையில்லாமல் குற்றம் சொல்ல விரும்பவில்லை. எங்களிடம் டபுள் என்ஜின் இருக்கிறது. விஜய்யிடம் என்ஜினே இல்லை. விஜய்யிடம் வண்டி, பெட்ரோல் டீசல், வண்டியை இயக்க யாரிடமும் இல்லை. 234 தொகுதிகளில் விஜய்யால் வேட்பாளர்களை நியமிக்க முடியுமா.

விஜய் வெளியே வந்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்கள் ஏற்று கொண்டால் பார்க்கலாம். தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் விஜய் பேசுகிறார். இதுவரை கட்சிகள் செய்யாத என்ன திட்டத்தை கொண்டு வரப் போகிறோம் என்று மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை. அவரின் பேச்சைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பச்சை பொய் பேசுகிறார்” என்றார்.

error: Content is protected !!