பஞ்சாப் மாநிலம் டர்ன் டாரன் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டக்கல்லூரியில் இன்று இந்த கோரச் சம்பவம் நிகழ்ந்தது. அங்கு முதலாம் ஆண்டு படித்து வந்த நவுசேரா பன்னவுன் என்ற மாணவி வகுப்பறையில் இருந்தபோது, அவருடன் பயிலும் பிரின்ஸ் ராஜ் சிங் என்ற மாணவர் திடீரென துப்பாக்கியால் அவரைச் சுட்டார். இதில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
மாணவியைச் சுட்ட கையோடு, மாணவர் பிரின்ஸ் ராஜ் சிங்கும் அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். துப்பாக்கிச் சத்தம் கேட்டு வகுப்பறையில் இருந்த மற்ற மாணவர்கள் அலறியடித்து ஓடினர். உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த அந்த மாணவரை மீட்ட போலீசார், அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரி வளாகத்திற்குள் துப்பாக்கி எப்படி வந்தது? கொலைக்கான பின்னணி என்ன? காதல் விவகாரமா அல்லது வேறு ஏதேனும் பகையா? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் கல்லூரி வகுப்பறையிலேயே நடந்த இந்த கொலைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

