திருச்சி எடமலைப்பட்டி புதூர், குட்டி மலை ரோடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில், சிறப்புச் சார்பு ஆய்வாளர் கிறிஸ்டோபர் ராஜ் தலைமையிலான போலீசார் அந்தப் பகுதியில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்த அன்பிலார் நகரைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவரை போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

