Skip to content

டெல்லியில் ஏ.ஐ. உச்சி மாநாடு: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு; பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். 20-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடானது, உலகளாவிய தெற்கு பிராந்தியத்தில் நடைபெற கூடிய முதல் உச்சி மாநாடு என்ற அளவில் பெருமையை பெற்றுள்ளது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க வருகை தரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பையேற்று, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் ஜயீத் அல் நாஹியான், சுலோவேக்கியா நாட்டு ஜனாதிபதி பீட்டர் பெல்லேகிரினி உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்த தலைவர்கள் இந்தியாவுக்கு வருகை தருகின்றனர்.

இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயகாவும் இதில் பங்கேற்க இன்று இந்தியாவுக்கு வருகிறார் என இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ஏ.ஐ. தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்போது, தொழில் நுட்பங்களை பயன்படுத்துவது மட்டுமின்றி அவற்றை நாம் உருவாக்கவும் வேண்டும் என்ற அடிப்படை கொள்கையை சார்ந்தே நம்முடைய சுயசார்பு இந்தியாவுக்கான பயணம் கட்டியெழுப்பப்பட்டு இருக்கிறது.
சுயசார்பு இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுக்கான (ஏ.ஐ.) என்னுடைய பார்வையானது 3 தூண்களில் அமைகிறது. இறையாண்மை, எல்லாவற்றையும் உள்ளடக்கியது மற்றும் புதிய கண்டுபிடிப்பு ஆகிய மூன்றே இந்த தூண்கள் என அவர் குறிப்பிட்டார்.
நம்முடைய ஏ.ஐ. மாதிரிகள் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான கோடி பேரை சென்றடையும் என்றும் லட்சக்கணக்கான தரம் வாய்ந்த வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் குறிப்பிட்ட அவர், ஏ.ஐ. சூப்பர்பவர் நாடுகளில் உலக அளவில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே என்னுடைய தொலைநோக்கு பார்வையாகும் என்றும் அவர் பேசியுள்ளார்.

error: Content is protected !!