Skip to content

சபரிமலை தங்கக் கவசம் திருட்டு வழக்கு: கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் ஜெயராம் ஆஜர்

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த கோயிலில் உள்ள துவார பாலகர்கள் சிலைகளில் இருந்த தங்க கவசங்களை செப்பனிட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, செப்பனிடும் பணிக்காக தங்க கவசங்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அப்போது தங்க கவசத்தில் சுமார் நான்கரை கிலோ தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்தது. அத்துடன், அம்மாநில கூடுதல் டிஜிபி வெங்கடேஷ் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் தனித்தனியாக இரண்டு வழக்குகளைப் பதிவு செய்த விசாரணைக் குழு, அதிரடி விசாரணையில் இறங்கியது.
முறைகேடு தொடர்பாக தங்க கவசங்களை புதுப்பிக்கும் செலவை ஏற்றுக்கொண்ட தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி, கோயில் தந்திரி கண்டரரு ராஜீவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கேரள போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், பண மோசடி வழக்கை கடந்த 9ஆம் தேதி அமலாக்கத் துறையும் கையில் எடுத்தது.

இதனிடையே நடிகர் ஜெயராமின் வீட்டில் சபரிமலை தங்க கவசங்களை வைத்து பூஜை செய்த படங்கள் வெளியாகின. இதையடுத்து சென்னையில் உள்ள அவரின் வீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உன்னிகிருஷ்ணன் போத்தியுடன், ஜெயராம் நீண்ட நாட்களாக தொடர்பில் இருந்ததும் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இந்த சம்மனை ஏற்று இன்று கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜெயராம் ஆஜராகியுள்ளார்.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகும் முன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த நடிகர் ஜெயராம், இந்த விஷயத்தில் உண்மை வெளிவர வேண்டும் என்று கூறினார்.

error: Content is protected !!