Skip to content

நீதிமன்ற தீர்ப்பை ஓரம் கட்டிய டிரம்ப்: இறக்குமதி வரி 15% ஆக அதிரடி உயர்வு

அமெரிக்க ஜனாதிபதியாக குடியரசு கட்சியை சேர்ந்த டிரம்ப், 2-வது முறையாக பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சீனா, கனடா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடுமையான வரிவிதிப்புகளை கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அமல்படுத்தினார்.
இதனால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஆடை, ஜவுளி, வேளாண், உணவு சார்ந்த பொருட்களுக்கு 25 சதவீத வரி, அதுதவிர 25 சதவீத கூடுதல் வரி என வரிவிதிப்புகள் கடுமையாக்கப்பட்டன. இதனால், இந்திய ஏற்றுமதி சந்தை பெருமளவில் நெருக்கடியை சந்தித்தது.

இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும்போது, கடுமையான வரி விதிப்புகளை சந்தித்தன. இந்த நிலையில், அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு உள்ளது. இதனால், இந்தியாவுக்கான வரிகள் 18 சதவீதம் என்றளவில் குறையும் என கூறப்பட்டது.
இந்த சூழலில், டிரம்ப்பின் வரிவிதிப்புகளுக்கு அமெரிக்காவிலேயே எதிர்ப்பு கிளம்பியது. சில வணிக நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அதில், டிரம்ப்பின் வரி விதிப்புகள் செல்லாது என நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் தெரிவித்தனர்.

எனினும், இறக்குமதிகளை ஒழுங்குபடுத்த ஜனாதிபதிக்கு அமெரிக்க நாடாளுமன்றம் அதிகாரம் அளித்து உள்ளது. அதன் அடிப்படையிலேயே டிரம்ப் அவற்றை அமல்படுத்தி உள்ளார் என்று துணை ஜனாதிபதி வான்ஸ் கூறினார்.
வரிவிதிப்பதற்கு என ஜனாதிபதி டிரம்ப்புக்கு பிற பரவலான அதிகாரங்கள் உள்ளன. அமெரிக்க தொழிலாளர்களை பாதுகாக்க அவற்றை டிரம்ப் பயன்படுத்துவார். இந்த அரசு நிர்வாகத்தின் வர்த்தக முன்னுரிமைகளை அவர் நவீனப்படுத்துவார் என்றார்.
இதன்படி வர்த்தக சட்டம் 1974, பிரிவு 122-ன் கீழ் 10 சதவீத வரி விதிப்புக்கான உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டு உள்ளார். இந்த சட்ட பிரிவின்படி, கட்டணம் செலுத்துதலில் ஏற்படும் பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் 150 நாட்களுக்கு இறக்குமதி வரியை உயர்த்த டிரம்புக்கு (அதிகபட்சம் 15 சதவீதம்) அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில், தற்காலிக 10 சதவீத இறக்குமதி வரியானது வருகிற 24-ந்தேதி அதிகாலை 12.01 மணி முதல் நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை நேற்று உறுதிப்படுத்தியது.

எனினும், சில பொருட்களுக்கு இதில் இருந்து விதி விலக்கு அளிக்கப்பட்டது. ஏனெனில் அவை அமெரிக்க பொருளாதாரத்திற்கு அவசியம் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்நிலையில், இரவோடு இரவாக இந்த வரியை 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதம் ஆக உயர்த்தி, டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அமெரிக்க வெள்ளை மாளிகையின் கிழக்கு அறையில் மாகாண கவர்னர்களின் கூட்டம் ஒன்று நேற்றிரவு நடந்தது.

இதில் விருந்தினர்களுக்கு தடபுடலாக இரவு விருந்து நடந்தது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், நான் அமெரிக்க ஜனாதிபதியாக, பல்வேறு உலக நாடுகளுக்கு விதித்திருந்த வரியை 10 சதவீதத்தில் இருந்து உடனடியாக 15 சதவீதம் என்ற சட்ட அதிகாரம் கொண்ட, முழு அளவுக்கு உயர்த்துகிறேன் என கூறினார்.
வருகிற சில மாதங்களில் என்னுடைய அரசு, புதிய மற்றும் அனுமதிக்கப்பட்ட சட்ட ரீதியிலான வரி விதிப்புகளை முடிவு செய்யும். இதனால், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக ஆக்கும் நடைமுறை வெற்றி பெறும். இதற்கு முன்பு இல்லாத வகையில் சிறந்த நாடாக அமெரிக்கா இருக்கும் என்றார்.
வரி விதிப்பு அமலில் டிரம்ப்பின் அதிகாரம் குறைக்கப்படும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கினால், வரி விதிப்புக்கான மாற்று வழிகளை கொண்டு அது அமல்படுத்தப்படும் என பல மாதங்களாகவே, வெளிநாட்டு வர்த்தக கூட்டாளிகளுக்கும், வர்த்தக சமூகத்தினருக்கும் டிரம்ப் நிர்வாகம் எச்சரித்து வந்தது கவனிக்கத்தக்கது.

error: Content is protected !!