சுதந்திர போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு (101) சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நல்லக்கண்ணு கடந்த 1-ந் தேதி திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். நல்லகண்ணு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கபட்ட செய்தி, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணு உடல்நிலையில் திடீரென பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிப்பதாக ஆஸ்பத்திரி தரப்பில் கூறப்பட்டது. கவலைக்கிடமான நிலையில், அவரது உடல் நிலை இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு நேரில் சென்று நல்லக்கண்ணுவின் உடல் நிலை பற்றி கேட்டறிந்தார்.

