கோவை, போத்தனூர் ரயில் நிலையம் அருகே சிறுத்தை நடமாடுவதாக பரவும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்து உள்ளதால், நகரை ஒட்டிய பகுதிகளில் அவ்வப் போது வனவிலங்குகள் நுழைந்து மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
சில தினங்களுக்கு முன்பு வெள்ளலூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக சில வீடியோக்கள் வெளியாகி, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
மேலும், வெள்ளலூர் சுற்று வட்டாரங்களில் உள்ள கால்நடைகளை சிறுத்தை அடித்து கொன்று விடுவதாகவும் வதந்திகள் பரவின.
இந்த விவகாரத்தை தீவிரமாக கவனித்து வந்த வனத்துறை அதிகாரிகள், கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்த போது அது சிறுத்தை அல்ல என்பது தெரியவந்தது.
இதன் இடையே, போத்தனூர் ரயில் நிலையம் அருகே சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக நேற்று ஒரு வீடியோ நேற்று இரவு சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோ போத்தனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத் தீயைப் போல வேகமாக பரவியது.
அந்த வீடியோவில், சிறுத்தை போன்ற தோற்றமுடைய ஒரு விலங்கு சாலையின் ஒரு பக்கத்தில் இருந்து தாவி காம்பவுண்ட் சுவர் மீது ஏறி, பின்னர் ஒரு இடத்தில் பதுங்கி அமர்ந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்று உள்ளன.
பொதுமக்கள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்து, மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி வந்தனர்.
இதுகுறித்து வனத் துறையிடம் விளக்கம் கேட்டபோது, வீடியோவை ஆய்வு செய்த அதிகாரிகள் அது சிறுத்தை இல்லை உறுதி செய்து உள்ளனர்.
மேலும், அந்த விலங்கு சிறுத்தை புலி வடிவில் காணப்படும் காட்டு பூனை எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

