தெலுங்கானாவில் ஐதராபாத் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் 130 மாவோயிஸ்டுகள் தங்களிடமுள்ள ஆயுதங்களை அரசிடம் ஒப்படைத்து விட்டு, முதல்வர் ரேவந்த் ரெட்டியின் முன் இன்று சரணடைந்தனர்.
அவர்களில் மாநில கமிட்டி உறுப்பினர்கள் 3 பேர், மண்டல கமிட்டி உறுப்பினர் ஒருவர், பிரதேச கமிட்டி உறுப்பினர்கள் 10 பேர், பகுதி கமிட்டி உறுப்பினர்கள் 46 பேர் மற்றும் பிற உறுப்பினர்கள் 70 பேர் என மொத்தம் 130 பேர் 124 வகையான நவீன ரக ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு சரணடைந்தனர்.
இதன்பின்னர் அவர்களிடையே முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசும்போது, மத்திய கமிட்டி உறுப்பினர் கணபதி உள்ளிட்ட மாவோயிஸ்டு தலைவர்கள் இயல்பு வாழ்க்கையில் இணைந்து மாநில மறுகட்டமைப்பில் பங்கு பெற வேண்டும் என கேட்டு கொண்டார்.
ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது என முடிவு செய்து, சரணடைந்த மாவோயிஸ்டுகளை பாராட்டிய அவர், பேச்சுவார்த்தையே ஒரே தீர்வு என வலியுறுத்தியதுடன், சிக்கல்களுக்கு ஜனநாயக நடைமுறையின் அடிப்படையிலேயே தீர்வு காண முடியும் என கூறினார்.

