Skip to content

சிலிண்டர் தேவை- கையிருப்பு விவரத்தை தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவு

தமிழ்நாட்டில் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு? தேவை எவ்வளவு? உடனடியாக தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது. ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60 சதவீதத்துக்கு மேல் உயர்ந்து விட்டது. இதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய அரசு உயர்மட்ட வட்டாரங்கள் கூறுகையில், “சர்வதேச எண்ணெய் சந்தைகளை ஒன்றிய அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை இப்போதைக்கு உயர்த்தும் திட்டம் இல்லை. விலை அழுத்தத்தை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இப்போதைக்கு தாங்கிக் கொள்ளும். அடுத்த 6 முதல் 8 வாரங்களுக்கு தேவையான கச்சா எண்ணெயும், பெட்ரோல், டீசலும் கையிருப்பில் உள்ளன. தடையற்ற வினியோகத்துக்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி உள்ளோம்

இந்தியாவில் கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை மாற்றப்படவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறையும்போது, எண்ணெய் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டிக்கொள்ளவும், சர்வதேச சந்தையில் விலை அதிகரிக்கும் போது நஷ்டத்தை தாங்கிக்கொள்ளவும் அனுமதிக்கும் கொள்கையை ஒன்றிய அரசு பின்பற்றி வருகிறது” என்று தெரிவித்திருந்தது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க ஒரு சிலிண்டர் வைத்துள்ள குடும்பங்கள் முன்பதிவு செய்வதற்கான கால இடை வெளி 21 நாட்கள் என்று சமீபத்தில் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அதை 25 நாட்கள் என்று ஒன்றிய அரசு உயர்த்தி உள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் கேஸ் சிலிண்டர்கள் கையிருப்பு எவ்வளவு உள்ளது..? தேவை எவ்வளவு..? என்பது குறித்து உடனடியாக இன்று (மார்ச் 10) மதியத்திற்குள் விவரம் அளிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேல் ஈரான் போர் சூழலில் தட்டுப்பாடு உள்ளதாக கூறப்படும் நிலையில் தமிழ்நாடு அரசு இந்த உத்தரவை தெரிவித்துள்ளது.

error: Content is protected !!