காரைக்குடியில் தடையை மீறி இறைச்சி விற்ற கடைகளுக்கு சுகாதாரத்துறையினர் ரூ.16 ஆயிரம் அபராதம் விதித்து, 150 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனர். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இறைச்சி கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் இன்று காலை தடை உத்தரவை இறைச்சி விற்கப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, நகர் நல அலுவலர் வினோத் ராஜ், சுருளி நாதன், ஆய்வாளர்கள் ஆதிநாராயணன் வெங்கடேஷ் ஆகியோர் காரைக்குடி வாட்டர் டேங்க், பர்மா காலனி, மருதுபாண்டியர் நகர், மகர் நோன்பு திடல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 20க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகளில் தடை உத்தரவை மீறி இறைச்சி விற்றது தெரியவந்தது. இந்த கடைகளில் இருந்து மொத்தம் 150 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர். மேலும், இந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.16 ஆயிரத்து 500 அபராதம் விதித்தனர்.

