ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் கட்டணப் பட்டியல்களில் எல்.பி.ஜி கட்டணம்”, “எரிவாயு கூடுதல் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசே கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், நுகர்வோர் சேவைக் கட்டணங்கள் மீதான தற்போதுள்ள வழிகாட்டுதல்களைத் தவிர்ப்பதற்காக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 10-ன்கீழ் இது போன்ற கட்டணங்களை உணவு நிறுவனங்கள் தாங்களாகவே விதிக்கக்கூடாது என்றும், கூடுதல் கட்டணம் வசூலிப்பது சேவைக்கட்டணம் அல்லது கூடுதல் கட்டணங்கள் வகையைச் சார்ந்தவை என்றும், கூடுதலாக பெறப்படும் கட்டணங்கள் 04.07.2022 தேதியிட்ட மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA) வழிகாட்டுதல்களை மீறுவதாக அமையும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் பின் வருமாறு தெளிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
1. எந்தவொரு ஹோட்டலோ அல்லது உணவகமோ, ரசீதில் (Bill) இயல்பாகவோ அல்லது தானாகவோ” LPG கட்டணங்கள்”, “எரிவாயு கட்டணங்கள் அல்லது அதுபோன்ற கட்டணங்களை விதிக்கக்கூடாது.
2. உணவுபட்டியலில் உள்ள (அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்கள் தவிர்த்து பிற அங்கீகரிக்கப்படாத கட்டணங்கள் வசூலிக்கக்கூடாது). விலையே இறுதி விலையாகும்.
3. நுகர்வோரிடம் எந்தவொரு கூடுதல் கட்டணத்தை செலுத்தும் படி தவறாக வழிநடத்தப்படவோ அல்லது கட்டாயப்படுத்தப்படவோ கூடாது.
கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்படும் நேர்வுகளில் நுகர்வோர் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகள்
1. கட்டணப்பட்டியலிலிருந்து கூடுதலாக பெறப்படும் கட்டணத்தை நீக்குமாறு ஹோட்டல் அல்லது உணவகத்திடம் கோரிக்கை வைக்கலாம்.
2. தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் (NCH) தொலைபேசி எண் 1915 மூலமாகவோ அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் மொபைல் செயலி மூலமாகவோ புகார் பதிவு செய்யலாம்.
3. நுகர்வோர் ஆணையத்தின் இ ஜாக்ரிதி இணைய தளம் மூலம் புகார் அளிக்கலாம்.
4. மாவட்ட ஆட்சியர் (அ) மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திடம் நேரடியாக புகார் அளிக்கலாம். செங்கல்பட்டு மாவட்டத்தில் இத்தகைய நடைமுறைகளை பின்பற்றுமாறும், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் முறையற்ற அல்லது அங்கீகரிக்கப்படாத கட்டணங்களை விதித்தால் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செங்கல்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மாலதி ஹெலன், ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.

