காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரம் உச்சகட்டத்தில் இருக்கும் வேளையில், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டி அவசர அவசரமாக நிறைவேற்ற துடிக்கும் மசோதாக்களுக்கு ஆதரவளிக்குமாறு பிரதமர் எதிர்க்கட்சிகளிடம் வேண்டுகோள் விடுத்து வருகிறார். அவசரத்திற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்க முடியும்.என்னவென்றால் அரசியல் ஆதாயம் தேடுவதும் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளுவதாகும். வழக்கம் போலவே இம்முறையும் பிரதமர் உண்மையை முழுமையாக வெளிப்படுத்தாமல் மறைத்து வருகிறார். சாதி கணக்கெடுப்பு பற்றிய பிரசாரம் பொய்யானது என்பது தெளிவாகிறது.
சிறப்பு அமர்வில் அரசாங்கம் எதை விவாதிக்க விரும்புகிறது என்பது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ முன்மொழிவும் இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பகிரப்படவில்லை. தொகுதி மறுவரையறைக்கான ஏதோ ஒரு சூத்திரம் முன்மொழியப்படுவதாக தெரிகிறது. கடந்த காலங்களை போலவே எந்தவொரு தொகுதி மறுவரையறைக்கும் முன்னதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படவேண்டும். விகிதாசார அடிப்படையிலான அதிகரிப்பு என்பது இழப்பிலேயே முடிவடையக்கூடும்.
அரசியல் அமைப்பில் விரிவான மாற்றங்களை திணிப்பதற்கான அவசரத்திற்கு வேறு எந்த நியாயமும் இல்லை. இந்த செயல்முறை ஆழமான குறைபாடுகளை கொண்டது, ஜனநாயக விரோதமானது. பெண்களுக்கான இடஒதுக்கீடு பிரச்னை அல்ல. இது ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது. உண்மையான பிரச்னை தொகுதி வரையறைதான். அதிகாரப்பூர்வமற்ற முறையில் கிடைக்கும் தகவல்களின்படி இது மிகவும் ஆபத்தானது, அரசியமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதலாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
