தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகாலை முதலே வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசைகளில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில், கவிஞர் சுப்பிரமணிய பாரதியாரின் சொந்த ஊரான எட்டயபுரத்தில் அமைந்துள்ள 2 கிராமங்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குளத்துவாய்ப்பட்டி மற்றும் குமரகிரி ஆகிய 2 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், வழிப்பாதை தகராறு காரணமாக தேர்தலை புறக்கணிப்பதாக கூறியுள்ளனர். அப்பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைக் கடந்து விவசாய நிலங்களுக்குச் செல்லும் பாதையைப் பொதுமக்கள் பயன்படுத்துவது தொடர்பாக பல ஆண்டுகளாக கிராம மக்களுக்கும், முகாமில் வசிப்பவர்களுக்கும் இடையே தகராறு நீடித்து வருகிறது. கடந்த 18-ந்தேதி நடந்த கல்வீச்சு தாக்குதலில் அப்பகுதி மக்கள் சிலர் காயமடைந்ததோடு, வழிப்பாதை பிரச்சினை மேலும் தீவிரமடைந்ததால் அங்கு மிகுந்த பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், பல ஆண்டு காலமாக நீடித்து வரும் போராட்டங்களுக்கு தீர்வு காணப்படும் வரை தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக 2 கிராமங்களை சேர்ந்த மக்களும் தெரிவித்துள்ளனர். விளாத்திகுளம் தொகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைந்துள்ள 64-ம் எண் வாக்குச்சாவடியில், பதிவு செய்யப்பட்ட 983 வாக்காளர்களில் நண்பகல் வரை 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
