உத்தர பிரதேசத்தில் ஏழு வயது சிறுவனை கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த குற்றவாளியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுகொலை செய்தனர்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள மல்லான்வன் பகுதியை சேர்ந்த முஸ்லிம் மத குருவுக்கு 7 வயதில் மகன் இருந்தான். கடந்த 3ம் தேதி தாத்தாவிடம் 20 ரூபாய் வாங்கிக்கொண்டு உறவினர்களுடன் உருஸ் பண்டிகைக்கு சென்ற சிறுவன் இரவு ஆன பின்னரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சிறுவனை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
இதற்கிடையே 7 லட்சம் ரூபாய் தந்தால் சிறுவனை விடுவிப்பதாக சிறுவனின் பெற்றோருக்கு மர்மநபரிடம் இருந்து போன் அழைப்பு வந்தது. பணம் ஏற்பாடு செய்வதாக கூறிவிட்டு போலீசுக்கு சிறுவனின் பெற்றோர் தகவல் அளித்தனர்.
மிரட்டல் வந்த போன் அழைப்பை போலீசார் ஆய்வு செய்ததில் இருவர் சிறுவனை கடத்தியிருப்பது தெரியவந்தது. இதற்கிடையே பணம் தராததால் ஆத்திரமடைந்த குற்றவாளி தன் கூட்டாளி ஒருவருடன் சேர்ந்து சிறுவனை பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்து அப்பகுதி கரும்பு தோட்டத்தில் சடலத்தை புதைத்திருப்பதாக அறிந்தனர். இதையடுத்து அவனது சடலத்தை போலீசார் மீட்டனர்.
இந்நிலையில் சிறுவனின் கொலையில் தொடர்புடைய நபர் கன்னோஜ் பகுதியை சேர்ந்த மஹ்னுார் (29) என்பதும் அவர் மீது 12க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அவரை பிடித்து தருவோருக்கு 50,000 ரூபாய் பரிசு தரப்படும் எனவும் போலீசார் அறிவித்தனர்.
இந்நிலையில் லக்னோ அருகே பபாத்தாமு பகுதியில் பதுங்கியிருந்த மஹ்னுாரை பிடிக்க சென்றபோது போலீசாரை குறிவைத்து மஹ்னுார் துப்பாக்கியால் சுட்டுள்ளார். பதிலுக்கு போலீசார் சுட்டதில் மஹ்னுார் பலியானார்.

