சென்னை நுங்கம்பாக்கம் உத்தமர் காந்தி சாலையில் ஜி.எஸ்.டி. அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் பிரதான கட்டிடத்தின் அருகே மற்றொரு கட்டிடமும் உள்ளது. இந்த கட்டிடத்தின் 5-வது தளத்தின் ஒரு அறையில் இருந்து நேற்று இரவு திடீரென புகை வெளியேறியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஊழியர்கள், உடனடியாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதற்கிடையே தீயை அணைக்க முயன்ற அங்கிருந்த ஜி.எஸ்.டி. அலுவலக எலக்ட்ரீசியன்கள் காளிஸ்வரன் ( 23), சபரிநாதன் (24) ஆகியோர் புகையினால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கினர். இதையடுத்து அவர்கள் மீட்கப்பட்டு, ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து அங்கிருந்த ஊழியர்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. தீ விபத்தில் அங்கிருந்த கம்யூட்டர்கள், பிரிண்டர், ஏ.சி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
