கரூர் மாவட்டம், காந்திகிராமம் அருகேயுள்ள இந்திராநகர் பகுதியில் செயல்பட்டு வந்த தலையணை தயாரிப்பு குடோனில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடோனில் தலையணைகளில் பஞ்சு நிரப்பும் பணிகள் நடைபெற்று கொண்டிருந்தபோது, இயந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. ஆரம்பத்தில் புகை கிளம்பியதை கவனித்த ஊழியர்கள் தீ பரவுவதை உணர்ந்து உடனடியாக அதை கட்டுப்படுத்த முயன்றனர்.
ஆனால் குடோனில் அதிகளவில் பஞ்சு மற்றும் தயாரான தலையணைகள் இருப்பதால் தீ வேகமாக பரவி முழு குடோனையும் சூழ்ந்தது. இதனால் பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பாக வெளியேறி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இருப்பினும், குடோனில் இருந்த தலையணை நிரப்பும் இயந்திரம் மற்றும் பெருமளவு தயாரிப்பு பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்ததால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவியது. தீ விபத்திற்கான சரியான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
