கரூரில் 670 மருந்துக் கடைகள் அடைப்பு: ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க கோரி வணிகர்கள் போராட்டம்.
ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதற்கு தடை விதிக்கவும், போலி மருந்து விற்பனையை கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி, இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் அறிவிப்பின்படி இன்று நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அதனைத் தொடர்ந்து, கரூர் மாவட்டத்திலும் மருந்து வணிகர்கள் முழுமையான ஆதரவு தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் உள்ள சுமார் 670 மருந்துக் கடைகள் இன்று அடைக்கப்பட்டன.
கரூர் மாநகர் பகுதி மட்டுமின்றி குளித்தலை, கிருஷ்ணாபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் முழுவதும் மூடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மருந்து விற்பனை முறையை தடை செய்ய வேண்டும், சட்டவிரோத மற்றும் போலி மருந்து விற்பனையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டம் முழுவதும் மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டதால், அவசர தேவைக்காக மருந்துகள் வாங்க முடியாமல் நோயாளிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
