தஞ்சாவூரில் கடந்த 18ம் தேதி தனியார் துரித உணவு நிறுவனத்தில், ஏசி கேஸ் நிரம்பும் பணியின் போது, சிலிண்டர் வெடித்து சிதறியதில் ஒருவர் பலியானார். இந்த விபத்தில் சிகிச்சை பெற்று வந்த ஏசி மெக்கானிக் நேற்று (21ம் தேதி) நள்ளிரவு இறந்து விட்டார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
தஞ்சாவூர்,மோரீஸ் கார்னர் பகுதியில், தனியாருக்கு சொந்தமான கட்டடத்தில், தரைத்தளத்தில், கே.எப்.சி., உணவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு உணவு தயாரிக்கும், கூடத்தில் உள்ள ஏ.சி.,யில் பழுது ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து ஏசி மெக்கானிக் நாஞ்சிக்கோட்டை சாலையை சேர்ந்த கணேசன் (43) என்பவர், ஏசிக்கான கேஸ் நிரம்பும் பணியில் ஈடுப்பட்டிருந்தார். அப்போது, சிலிண்டரில் ஏற்பட்ட அழுத்ததினால், வெடித்து சிதறியது. இதில், ஏற்பட்ட அதிர்வில், கட்டடம் முழுவதும் உள்ள ஜன்னல், கதவு கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. ஏசி பாகங்களும் வெடித்து சிதறியது.
இவ்விபத்தில், ஏசி மெக்கானிக் கணேசன் துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அப்போது, ஏசி சீரமைப்பு பணியை கண்காணித்துக் கொண்டு இருந்த கேஎப்சி., ஊழியர்களான பொன்னாவரை பகுதியை சேர்ந்த ஜோதி மகன் ரவிராஜ் (27), திருவையாறு அருகே குழிமாத்துார், அந்தோணியார்கோவில் தெருவை சேர்ந்த சவேரியார் மகன் அருண்குமார் (26) ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மேலும், ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன ஊழியர்களான மானோஜிப்பட்டி, வனத்துர்கா நகரை சேர்ந்த கலியபெருமாள் மகன் கதிரேசன் (24), செங்கிப்பட்டி கீழத்தெருவை சேர்ந்த துரைசாமி மகன் பிரேம்(26), ரெட்டிப்பாளையம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் மகன் அஜித்குமார் (22), ஆகியோரும் படுகாயமடைந்தனர். உடன் அனைவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் அன்று இரவே உணவக ஊழியர் ரவிராஜ் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறுத்து தஞ்சாவூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் இந்த விபத்து படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்து ஏசி மெக்கானிக் கணேசன் சிகிச்சை பலனின்றி நேற்று (21ம் தேதி) நள்ளிரவு இறந்து விட்டார். இதையடுத்து இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
