சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த இரு பயணிகளிடம் 12 ட்ரோன்கள் பறிமுதல் – வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், துபாய், மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு டாலர்கள், செல்போன், லேப்டாப் உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆகியவற்றை மறைத்து கடத்தி வருவதும், அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் மூலம் இன்று திருச்சி வந்த பயணிகளை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது இரண்டு சந்தேகத்திற்கிடமான பயணிகளை சோதனை செய்ததில், அவர்களது உடைமைகளில் தலா 6 ட்ரோன்கள் வீதம் 12 ட்ரோன்களை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து சுங்கச் சட்டம் 1962-ன் கீழ் ட்ரோன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், இரண்டு பயணிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
