நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவின் போது தேர் சக்கரத்திற்கும் சுவருக்கும் இடையே சிக்கி கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவிழாவில் தேர் இழுக்கப்பட்டபோது எதிர்பாராத விதமாக 18 வயதான ஹர்ஷவர்தன் என்ற கல்லூரி மாணவர் தேரின் சக்கரத்திற்கும் அருகில் இருந்த சுவருக்கும் இடையே சிக்கிக் கொண்டார். படுகாயமடைந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அறிந்த முதல்வர் விஜய் வேதனை தெரிவித்துள்ளார். “திருச்செங்கோட்டில் தேரின் சக்கரத்தில் சிக்கி 18 வயது கல்லூரி மாணவர் ஹர்ஷவர்தன் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதனை அடைந்தேன்” என்று அவர் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், உயிரிழந்த மாணவர் ஹர்ஷவர்தனின் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவில் நிகழ்ந்த இந்த சோக சம்பவம் பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
