பயிர் கடன் தள்ளுபடியில் பாரபட்சம், முழுமையாக தள்ளுபடி செய்யக்கோரி: கரூரில் விவசாயிகள் காய்கறிகளை மாலையாக அணிந்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
தமிழக வெற்றி கழகம் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி அனைத்து விவசாயிகளுக்கும் முழுமையான கடன் தள்ளுபடி வழங்கவில்லை என்றும், இதில் பாரபட்சம் கடைபிடிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திரண்ட விவசாயிகள், பயிர் கடன் தள்ளுபடி வழங்குவதில் அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், சொற்ப கடன் தள்ளுபடி செய்ததாக குற்றம்சாட்டி நூதன முறையில் காய்கறிகளை மாலையாக அணிந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், தேர்தல் வாக்குறுதியின்படி அனைத்து விவசாயிகளின் கடன்களையும் எந்த வித வேறுபாடும் இன்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
