திமுக நிர்வாகி கனகராஜ் வீட்டில் கொள்ளை; 7 1/2 சவரன் தங்கம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு : போலீசார் தீவிர விசாரணை.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தான்தோன்றிமலை அண்ணா நகர் 3-வது கிராஸ் பகுதியில் உள்ள திமுக மத்திய மாநகர செயலாளரும், மாநகராட்சி 4-வது மண்டலக் குழுத் தலைவருமான கனகராஜின் வீட்டில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனகராஜ் சொந்த வேலை காரணமாக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியூர் சென்றிருந்த நிலையில், இன்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருந்ததை

கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உள்ளிட்ட பொருட்கள் உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக தான்தோன்றிமலை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவாகியுள்ள வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் ஏதாவது உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த 7 1/2 சவரன் தங்கம், ஒரு லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
