மகாராஷ்டிர மாநிலம் பரபானி மாவட்டம் யஷ்வாடி பகுதியில் உள்ள அனுமன் கோவில் வளாகத்தில், புதிதாகக் கட்டப்பட்டு வந்த சபா மண்டபத்தின் கூரை திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. கூரை அமைப்பதற்காக மூங்கில் மற்றும் இரும்பு கம்பிகளால் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக முட்டுகள் திடீரென சரிந்து விழுந்ததில், அங்கு கூடியிருந்த பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர்.
இந்தக் கொடூர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 25 முதல் 30 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் இடிபாடுகளை அகற்றி 7 பேரின் உடல்களை மீட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 15-க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
