தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ள குரூப் 1 தேர்வு அறிவிப்பில், 2026-ஆம் ஆண்டிற்கு வெறும் 26 காலிப்பணியிடங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலியிடங்களை உயர்த்தக் கோரி தேர்வர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் தற்போதைய அரசை கடுமையாக விமரிசித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அதிமுக ஆட்சியில் நான் மனிதவளத்துறை அமைச்சராக இருந்தபோது டிஎன்பிஎஸ்சி மற்றும் இதர துறைகள் மூலம் மொத்தம் 2,35,835 அரசுப் பணிகள் வழங்கப்பட்டன. தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% முன்னுரிமையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடும் அம்மா அரசில்தான் உயர்த்தப்பட்டது. ஆனால், தற்போதைய கவர்ச்சி மாடல் அரசு வெறும் 26 இடங்களை அறிவித்து மாணவர்களைச் சோர்வடையச் செய்துள்ளது. எனவே, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை உடனடியாக உயர்த்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “உசுப்பேத்தி விட்டுட்டு உம்முனும், கடுப்பேத்தி விட்டுட்டு கம்முனும் இருக்காதிங்க Bro!!” எனத் தற்போதைய அரசை சாடியுள்ளார்.
