தஞ்சாவூர் அருகே குடும்பத்தகராறில் மண்எண்ணை ஊற்றி தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சாவூர் மானம்புச்சாவடி விஜய மண்டபத் தெருவை சேர்ந்தவர் கோமதி (43). இவரது இரண்டாவது கணவர் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் விஜயகுமார் (41). இவர்கள் இருவரும் தற்போது மாரியம்மன் கோயில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையில் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு மீண்டும் இருவருக்கும் மத்தியில் குடும்பத்தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த கோமதி வீட்டில் வைத்திருந்த மண்எண்ணையை தன் உடலில் ஊற்றி தீக்குளித்தார். உடன் அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 6ம் தேதி இரவு 11 மணியளவில் கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
