திருச்சி கிராபட்டி பகுதியில் கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட நபர் மற்றும் அவரது நண்பரின் கார்களை மர்ம நபர்கள் தீவைத்து எரித்த சம்பவம் மாநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, உறையூரைச் சேர்ந்த பிரதீப் மற்றும் கிராப்பட்டியைச் சேர்ந்த அஜீஸ் கான் ஆகிய இருவருக்கும் சொந்தமான இரண்டு கார்கள், கிராப்பட்டி பிள்ளையார் கோவில் எதிரே நிறுத்தப்பட்டிருந்தன. இன்று அதிகாலை சுமார் 2 மணி அளவில், அங்கு வந்த மர்ம நபர்கள்

நான்கு பேர், கண்ணிமைக்கும் நேரத்தில் இரு கார்களுக்கும் தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். கார்கள் கொழுந்துவிட்டு எரிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்ததுடன் தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரில் ஒருவன் தப்பி விடவே மற்ற மூவரையும் வளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கண்டோன்மெண்ட் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் இரண்டு கார்களும் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடா கின. இந்த சம்பவம் குறித்து எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பெஸ்கின், யாசர் அராபத், பாசித் மற்றும் ஒரு 17 வயது சிறுவன் ஆகிய 4 பேர் அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளனர். இதனைப் பார்த்த அஜீஸ் கான், கஞ்சா விற்பனை செய்வதை தைரியமாக தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அஜீஸ் கான் மீது கடும் ஆத்திரத்தில் இருந்த அந்த 4 பேர் கொண்ட கும்பல், பழிவாங்கும் நோக்கில் இந்த வெறிச் செயலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. கஞ்சா கும்பலின் இந்த துணிகரமான அராஜகம் திருச்சியில் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய ஒருவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
