அனைத்து பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரியில் உள்ள கூட்டுறவு கடன் சங்கம் அலுவலகம் எதிரே இன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகள் பெற்ற பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும், தவெக அரசு உடனடியாக தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்ற வேண்டும் என கோரி தமிழக விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில், ‘அனைத்து ஏரிகளையும் தூர்வாரி நீர்நிலைகளை பாதுகாத்தல், கூட்டுறவு கடன் சங்கம் மூலம் அனைத்து உரங்களும் தடையின்றி உரிய பருவகாலங்களில் கிடைக்க நடவடிக்கை எடுத்தல், உழவு தொழில் செய்யும் விவசாயிகளின் நலன் கருதி 60 வயது கடந்த விவசாயிகளுக்கு ரூ.20,000 ஓய்வூதியம் வழங்குதல், உழவுத்தொழில் செய்யும்போது விபத்து ஏற்பட்டு உயிரிழக்கும் விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்குதல், அனைத்து ஏரி கரைகளிலும், வனப்பகுதிகளிலும் பனை விதை நடவு செய்ய அரசு நடவடிக்கை எடுத்தல், வன விலங்குகளிடம் இருந்து விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல், ஈஸ்வரன் குளத்தில் இருந்து வெளியேறும் உபரிநீர் பொன்னேரி ஏரிக்கு தடையின்றி செல்ல தடுப்புசுவர் அமைத்தல், ஏலகிரிமலை நீர் தடையின்றி வர கால்வாய்களை தூர்வாரி கரைகளை பாதுகாத்தல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
