கோவை, துடியலூர் அருகே கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி ஊருக்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை, வீட்டின் காம்பவுண்ட் கதவை உடைத்து உள்ளே நுழைய முயன்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
கோவை, துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில், கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீருக்காகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உலா வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை ஒன்று கதிர் நாயக்கன்பாளையம் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்தது. அங்கு இருந்த வீடொன்றின் காம்பவுண்ட் சுவரின் இரும்பு கதவை தனது பலத்தால் உடைத்து, வீட்டு வளாகத்திற்குள் நுழைய முயன்று உள்ளது.
கதவை உடைத்த பிறகு உள்ளே நுழைய முயன்றது. வீட்டின் அருகே நின்று இருந்த வாழை மரத்தைப் பிடுங்கிச் சேதப்படுத்தியதுடன், அதன் இலைகளைத் தின்று பசியாறியது.
பின்னர் சத்தம் கேட்டு வீட்டின் உரிமையாளர்கள் விழித்துக் கொண்டதை உணர்ந்த யானை, மெதுவாக அங்கு இருந்து நகர்ந்து சென்றது.
யானை காம்பவுண்ட் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைய முயன்ற சம்பவம் பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
யானை நடந்து செல்லும் காட்சி அங்குப் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ காட்சிகளைச் சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ள அப்பகுதி பொதுமக்கள், இரவில் வீட்டை விட்டு வெளியே வரும் போது அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.
மேலும் வனத் துறையினரின் இந்த காட்டு யானை அடர்ந்த வனப்பகுதிக்கும் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
