தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு பகுதியில் இன்று இரவு ரோந்து பணியில் பீர்க்கன்காரணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் விக்டர் ராஜய்யா ஈடுபட்டிருந்தார்.
அப்போது குண்டுமேடு சுடுகாடு அருகே சுமார் 7 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று இருப்பதாக பொதுமக்கள் கூச்சலிட்டனர். தகவல் அறிந்து அங்கு சென்ற உதவி ஆய்வாளர் விக்டர் ராஜய்யா, பாம்பை பிடித்து அப்புறப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது.
அப்போது அவர் சீருடையில் பாம்பை பிடித்து அடிக்கும் காட்சியை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
ஒருபுறம், இரவு நேரத்தில் பொதுமக்கள் அச்சமடைந்த நிலையில், துணிச்சலாக பாம்பை பிடிக்க முயன்ற காவல் உதவி ஆய்வாளரின் செயலுக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம், பாம்பை அடித்து கொல்வதற்கு பதிலாக, வனத்துறை அல்லது பாம்பு பிடிப்பவர்களின் உதவியுடன் பாதுகாப்பாக மீட்டு வேறு இடத்தில் விடப்பட்டிருக்க வேண்டும் என சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
காவல் உதவி ஆய்வாளரின் இந்த நடவடிக்கை குறித்து சமூக வலைதளங்களில் ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், பாம்பை பிடிக்கும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.
