Skip to content

ஒரு நாள் மழையில்…வெள்ளக்காடான கோவை நேரு விளையாட்டரங்கம்…. கடைக்காரர்கள் கண்ணீர்

கோவையில் நேற்று இரவு மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் கோவை அவிநாசி மேம்பாலத்திற்கு அடியில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் குடியிருப்பு வாசிகள் அவதிக்குள்ளாகினர்.

கோவை நேரு உள் விளையாட்டு அரங்க வளாகத்திற்கு வெளியில் செயல்படும் கடைகளுக்குள்ளும் மழைநீர் புகுந்ததால் கடையில் இருந்த பொருட்கள் மழை வெள்ளத்தில் நனைந்து சேதம் அடைந்தன.

நேரு உள் விளையாட்டு அரங்க வளாகத்திற்கு வெளிப் புறம் சுற்றிலும் உணவகங்கள், செருப்பு கடைகள், விளையாட்டுப் பொருட்கள் கடைகள் என சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகள் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதன் அருகிலேயே வஉசி மைதானமும் பூங்காவும் உள்ளது. தினந்தோறும்

காலை மற்றும் மாலை வேளைகளில் ஏராளமானோர் அங்கு நடைபயிற்சி மேற்கொள்வார்கள். வார விடுமுறை நாட்களில் குழந்தைகளுடன் வரும் குடும்பத்தினர் அங்கு பொழுதை கழிப்பர். மேலும் அப்பகுதியில் கால்பந்து, டென்னிஸ், ஆகிய விளையாட்டு மைதானங்களும் உள்ளது. மேலும் மாநகராட்சியின் ஜிம்னாஸ்டிக் தற்காப்பு பயிற்சி மையமும் அங்கு செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான குழந்தைகள் மாலை வேளைகளில் தற்காப்பு பயிற்சி. உடற்பயிற்சி மேற்கொள்வார்கள்.

நேற்று பெய்த கன மழையால்  கடைகளுக்குள் மழை நீர் புகுந்து, கடைகளில்  இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்ததாக  கடைக்காரர்கள் கவலையோடு தெரிவித்தனர். மழை பெய்யும் பொழுதெல்லாம் இவ்வாறு கடைகளுக்குள் மழை நீர் புகுந்து விடுவதாகவும், இங்குள்ள கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு கால்வாய் நிரம்பி கழிவுநீரும் வெளியேறி விடுவதால் மழைநீருடன் சேர்ந்து கழிவு நீரும் கடைகளுக்குள் புகுந்து விடுவதாகவும் சாலைகளிலும் தேங்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.

இந்த கடைகளுக்கு சுமார் 80 ஆயிரம் ரூபாய் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி வரும் நிலையில் தங்களுக்கென கழிவறை வசதி கூட இல்லை எனத் தெரிவித்த கடைக்காரர்கள் பல நாட்களாக இது போன்ற இன்னல்களை அனுபவித்து வருவதாக தெரிவித்தனர். மேலும் மாலை நேரங்களில் கொசுக்கள் பூச்சிகளின் தொல்லையும் அதிகரித்து விடுவதாகவும், இதனால் தற்காப்பு பயிற்சிக்காக வரும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை என தெரிவித்த அவர்கள்  தீபாவளி நெருங்குவதால், நல்ல வியாபாரம் நடைபெற வேண்டிய நேரம். எனவே  மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு கழிவுநீர் தேங்காதவாறும் மழைநீர் கடைகளுக்குள் புகாத வண்ணமும் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!