சென்னை கொடுங்கையூர் திருவள்ளுவர் நகர் மூன்றாவது குறுக்கு தெரு பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபிக் 48 இவர் மேற்கண்ட முகவரியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். வடபெரும்பாக்கத்தில் பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். நேற்று மாலை 6 மணி அளவில் இவரது வீட்டில் கழிவு நீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டதால் திருவள்ளுவர் நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் உள்ள கழிவுநீர் தொட்டியின் மூடியை ஆட்களை வைத்து திறந்து பார்த்தபோது அதில் பிறந்து சில நாட்களே ஆன ஆண் குழந்தையின் சடலம் இருந்துள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது ரபிக் இதுகுறித்து கொடுங்கையூர் போலீசருக்கு தகவல் தெரிவித்தார். கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை குறை பிரசவத்தில் இறந்து பிறந்ததால் கழிவுநீர் தொட்டியில் போட்டு விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.