பாமக நிறுவனர் ராமதாஸ், நேற்று அன்புமணி மீது சரமாரி பல குற்றச்சாட்டுகளை கூறி இருந்தார். இந்த நிலையில் இன்று சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் அன்புமணி 5 மாவட்ட பாமக தலைவர்கள், ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளை சந்தித்தார்.
இந்த கூட்டத்தில் வக்கீல் பாலு, பொருளாளர் திலகபாமா, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. மூர்த்தி, மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தை தொடங்கி வைத்து அன்புமணி பேசியதாவது:
5 மாவட்ட செயலாளர்கள் தலைவர்கள் மற்றும் ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகள் கூடி இருக்கிறோம். உறுப்பினர் அட்டைகளை புதுப்பிக்க, ஒவ்வொரு3 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் நிகழ்வு தான். இந்த பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். பாமகவின் பொதுக்குழு வால் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற தலைவர் நான். (தொண்டர்கள், நிர்வாகிகளை பார்த்து) நீங்கள் தான் பாமக. நீங்கள் இல்லாவிட்டால் கட்சி இல்லை. பாமக தொண்டர்களின் சொத்து. தனிப்பட்ட யாருக்கும் இது சொந்தம் அல்ல.
‘நீங்கள் தான் பொதுக்குழுவில் என்னை தலைவராக தேர்வு செய்தீர்கள். உங்களுடன் சேர்ந்து ஒரு அடிமட்ட தொண்டனாக வேலை செய்வேன். பொறுப்புகள் வரும் போகும். தொண்டர்கள் இல்லாமல் பாமக கிடையாது. இப்போது 5 மாவட்ட நிர்வாகிகளை சந்திக்கிறேன். மாலையில் 5, 6 மாவட்ட நிர்வாகிகளை சந்திப்பேன், இப்படியாக 3 நாட்கள் இந்த கூட்டம் நடைபெறும்.
ஜனநாயகத்தை மனதில் நிறுத்தி களத்தில் இறங்குவோம், முதல் தொண்டனாக நான் இறங்குவேன். தமிழ்நாட்டின் வளர்ச்சி தான் நம்முடைய இலக்கு . நம்மிடம் வேற்றுமை கூடாது. அந்த அடிப்படையில் புதிய உறுப்பினர்களை சேர்த்து, பழைய உறுப்பினர்கள் அட்டையை புதுப்பித்து கொள்ள வேண்டும். அதை எப்படி செய்ய வேண்டும் என்பதை இங்கு சொல்லுவோம். அதை நீங்கள் செய்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர் அன்புமணி, பத்திரிகையாளர்களை வெளியேறும்படி கூறினார். அப்போது அவர் கூறியதாவது: இது எங்கள் உள்கட்சி விவகாரம். எனவே ஊடகங்கள் இனி இங்கிருந்து போகலாம். நாங்கள் போராட்டம் நடத்தினால் ஆதரவு தாருங்கள் /வேறு எதையாவது எதிர்பார்த்து வராதீர்கள். தனியாக என்னை சந்தித்து கேளுங்கள் பேசுகிறேன். இது கட்சியின் விவகாரம். இங்கு வந்ததற்கு நன்றி. நீங்கள் இப்போது போகலாம். நேரம் கொடுங்கள் உங்களை சந்திக்கிறேன். எந்த கேள்வி கேட்டாலும் பதில் அளிப்பேன். விரைவில் பத்திரிகையாளர்களை சந்திப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். அடுத்ததாக வக்கீல் பாலுவும், பத்திரிகையாளர்களை செல்லும்படி வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து பத்திரிகையாளர்கள் வெளியேறினர். பின்னர் அனைவருக்கும் உறுப்பினர்கள் அட்டை வழங்கப்பட்டது.