தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கான வகுப்புகள் இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பி.ஏ., பி.காம். உள்பட பல்வேறு பாடப்பிரிவுகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 காலியிடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களுக்கு சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
அவர்களுக்கான தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டு, கலந்தாய்வும் நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 3 ஆயிரத்து 363 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பொது பிரிவினருக்கான கலந்தாய்வு 2 கட்டங்களாக நடந்தது. கடந்த மாதம் (ஜூன்) 20ம் தேதியுடன் 2ம் கட்ட கலந்தாய்வு முடிவில் 75 ஆயிரத்து 811 இடங்கள் நிரம்பியது. மேலும் 30ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று உயர்கல்வித் துறை அறிவித்தது.
அந்த கலந்தாய்வின் முடிவில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 299 இடங்களில் 84 ஆயிரத்து 899 இடங்கள் நிரம்பி இருக்கின்றன. இதில் அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் 23 ஆயிரத்து 295 பேருக்கு இடம் கிடைத்துள்ளது. மீதம் உள்ள இடங்களை வகுப்பு வாரியாக(பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.) பிரித்து வருகிற 7ம் தேதி கலந்தாய்வு மூலம் இடங்களை நிரப்பப்பட உள்ளன.
இதற்கிடையில் இன்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கின. முதல் நாள் கல்லூரிக்கு வந்த மாணவ, மாணவிகளை பேராசிரியர்கள், சீனியர் மாணவர்கள் சாக்லேட், பூ கொடுத்து வரவேற்றனர்.கடந்த 2 ஆண்டுகளாக தாமதமாக கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஜூலை முதல் வாரத்திலேயே கல்லூரி தொடங்கப்பட்டு இருப்பதால் மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இதனிடையே ராகிங் போன்ற அத்துமீறல்களைத் தடுப்பதற்கான பணிகளை முன்னெடுக்கவும் வேண்டுமென கல்லூரி நிர்வாகங்களுக்கு, உயர்கல்வித் துறை அறிவுறுத்தி உள்ளது.