தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் முன்னாடியே ஐஸ்வர்யா ராஜேஷ். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். ஆரம்பத்தில் சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து வந்த அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான ‘டிரைவர் ஜமுனா’, ‘ரன் பேபி ரன்’ உள்ளிட்ட சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அவரது ட்விட்டர் பக்கத்தில் ஊடுருவிய மர்ம நபர்கள் கணக்கை முற்றிலும் ஹேக் செய்துள்ளனர். தற்போது மீண்டும் ட்விட்டர் கணக்கை மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது.
சமீபகாலமாக நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என பலரது ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. இதுபோன்று ஊடுருவும் மர்ம நபர்கள், சில மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். சமூக வலைதளங்களில் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த நேரத்தில் இது போன்ற செயல்கள் அந்த சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு நம்பிக்கையின்மையை தருவதாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டுகின்றனர். சைபர் க்ரைம் போலீசார் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.